வியாழன், 29 செப்டம்பர், 2011

இறப்பின் 5ம் நாள் ..

 இன்றிலிருந்து
ஐந்தாம் நாள் 
இறப்பேனென தோன்றியது 
கனவில் ...

அனுபவிக்காதவைகளை 
அனுபவிக்க 
முடிக்காதவைகைளை 
முடிக்க 
பார்க்காதவர்களை பார்க்க 
சொல்லப்படாதவைகளை
உணர்த்திவிட 
மதுவின் போதையில் 
திளைத்திட
திட்டமிட்டுகொண்டேயிருந்தேன்...

ஆறாம் நாள் 
இறந்திருந்தேன் 
எதுவும் 
முடிக்கப்படாமல் ..


 

புதன், 28 செப்டம்பர், 2011

நெளிந்து செல்லும் சாலைகள்

பயணத்தின் தாகம் 
தீராமல் 
சாலைகள் 
உதடுகளாய் 
உறிஞ்சுகின்றன  என்னை .

நாக்குகளாய் நெளியும் 
நெடுஞ்சாலைகளும் 
தெருக்களும் 
விழுங்க காத்திருகின்றன 
வெகுகாலமாய் 
வெயில் போர்த்தியும் 
நிலவில் குளித்தும் 
எனக்காய் .

பயமில்லை...
விருப்பத்துடனே
பயணத்தை 
ஆரம்பிக்கிறேன் 
ஓவ்வொரு முறையும் .  




வியாழன், 22 செப்டம்பர், 2011

கல்

கல்லின் 
உள்ளே உறங்கும் 
புத்தனை 
காண முடிகிறது  எனக்கு .

இன்ன பிறரையும் 
அவ்வாறே ..

கல் மட்டுமே 
தெரிகிறது என்கிறாய் 
நீ .

அந்த சிலையை 
உடைத்து 
காண்பிக்கிறேன் ..
கல் 
என்கிறாய் 
மறுபடியும் ...

உள்ளே 
ஒரு ராமனோ 
ஒரு புத்தனோ 
உறங்கிக்கொண்டிருக்கலாம் 
என்பதை மறந்து .